மன்னார்குடி, டிச. 15:கூத்தாநல்லூர் அருகே வெறி நாய்கள் கடித்ததில் 23 ஆடுகள் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கொத்தங்குடி, நன்னிமங்கலத்தை கிராமத்தை சேர்ந்த ராஜப்பா, பாஸ்கர், சிவானந்தம், செல்வம், ராமமூர்த்தி, சந்திரோதயம், கனக சபாபதி மற்றும் பல்வேறு நபர்களுக்கு சொந்தமான சுமார் 50 ஆடுகள் சூரியன்தோப்பு என்ற பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் நேற்று மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த 5 வெறி நாய்கள் ஒன்றாக சேர்ந்து தோப்பில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை கடித்து குதறியதில் 23 ஆடுகள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 15 ஆடுகள் படுகாயமடைந்தது. தகவல் அறிந்த கொத்தங்குடி திமுக ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகா ராதாகிருஷ்ணன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பலியான ஆடுகளை பார்வையிட்டு ஆடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் கூத்தாநல்லூர் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர். கால்நடை மருத்துவர் மகேந்திரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக்குழுவினர் காயமடைந்த 15 ஆடுகளுக்கும் தடுப்பு ஊசிகளை போட்டு மருத்துவம் பார்த்தனர். வெறிநாய்கள் கடித்ததில் 23 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் கூத்தாநல்லூரில் சோகத்தை ஏற்படுத்தியது.